Friday, 1 May 2015

என் தப்புத்தான்....

எதிர்விட்டு யன்னல்
எப்பவும் போல
பூட்டியே
இருந்தது

வெள்ளைப் பாய்
விரித்த
நித்திய
கல்யாணிப்பூக்கள்
நிலத்தை
மறைத்தது
அவள் வீட்டில்
இல்லாதது
தெரிந்தது

வந்தவுடன்
வரவேற்று
வாலாட்டும்
நாய்
சோகத்தை
சுமக்கத்
தாங்காத
தலையை
தொங்கவிட்டு
தூக்கம் போல்
நடித்தது

வழி நெடுக
தேடியும்
தெய்வத்தை 
வரி வரியாய்
பாடியும்
வராத
உன் பார்வையைத்
தேடித் தேடி
வழி தெரியாமல்
நடந்தேன்

வாங்கி வந்த
பத்திரிகையை
வழக்கம் போல்
வரிக்கு வரி
படிக்க
என் வீட்டு
வாசலில்
வைத்தே விரித்தேன்...

முன் பக்கச் சேதியில்

மீட்டு வந்த
நகையுமின்றி
வீட்டு வாடகைக்கு
வழியுமின்றித்
தயக்கமுள்ள
தனிமையில்

வீட்டுக்கு வரப்பயந்து
வேகமாய் வந்த
வாகனத்துக்கு
தன் உயிரைக்
கொடுத்தாள்
வாசுகி.....

கண்ணீரில்
கரைந்த
எழுத்துக்கள்
மெல்ல மெல்ல
என் 
கண்ணைவிட்டுக்
காணாமல்
போனது
உன்னைப் போல...

எதிர் வீட்டு
யன்னலுக்குள்
குடியிருந்த
 உன்னிடம்
சொல்லத்
துணிவின்றி
சொல்லாமல்
விட்டது
என் தப்புத்தான்...

வாடகையே
இல்லாமல்
உனக்காகக்
காத்திருந்த
என் இதயத்தில்
குடி
இருக்க
வா
சுகியென்று
சொல்லாமல்
விட்டது
என் தப்புத்தான்....

                                         

No comments:

Post a Comment