Wednesday, 16 September 2015

நாளை முதல் குடிக்க மாட்டேன்

மேகம் இறங்கி வந்து
கூரையில
உட்கார்ந்தது போல்
மூடிகொண்டது
முகில் கூட்டம்
மப்பும் மந்தாரமுமாய்....

முழு நீளக்
கும்மிருட்டில்
கூச்சலிட்டுக்
குமிறிக் கொண்டு
வந்த
கூனல் விழுந்த
குடும்பத்
தலைவர்
அவர்
கைக்கடிகாரம்
காட்டிய நேரம்
இப்போதுதான்
எட்டுமணி..
பகல் முழுதும்
மதுவின் மயக்கத்தில்
அது ஓடாமல்
நின்று போனதும்
தெரியாமல்.....

பற்றைக்குள் 
ஒளித்து வைத்த
பகலிறக்கிய
கள்ளு முட்டியின்
பச்சை வாசத்தை
இப்போதும் தேடுகிறார்...

மெட்டறுந்த 
பாட்டு வேற
பாகவதர் போல
ரோட்டையே
சொந்தமாக்கி
குறுக்கும் நெடுக்குமாய்
குந்தி எழுந்து
நடை பழகி

வீடு வந்து
சேர்ந்த போது
நாய் கூட 
மதிக்கவில்லை
நக்கலாய் சிலிர்த்தது
குடிகாரனென்று....

நாளை முதல் 
குடிக்க மாட்டேன்
நன்றியுள்ள நாயே....

வீட்டுக்கு வெளியே
விழுந்து படுத்தவர்
இன்னும்
எழும்பவே இல்லை
பின்னிரவும்
தாண்டி
நண்பகலில்
நடு முற்றத்தில்
நாளைய கனவுடன்...

குடிகாரன் பேச்சு
அவருக்கே
  விடிந்தால்தான் தெரியும்...

அருள் நிலா வாசன்
16.09.2015                                       






Monday, 14 September 2015

ஆணியிலே தொங்கவிடு

வேண்டாமென்று
நீ தூக்கியெறிய
நானுந்தன் வீட்டு
விளக்குமாறு அல்ல

நீதான்
முதன் முதலில்
உன்
வர்ணங்கள் பூசிய
உன் முதல்
எழுத்துப் பலகை...

அப்போது
உன் கண்ணுக்கு
பளிச்சென்று
தெரிந்த
என்னை
இப்போதே

ஆணியிலே
தொங்கவிடு
எல்லோரும்
அழித்து அழித்து
எழுதிவிட்டுப்
போகட்டும்
என்
விதியின் வரிகளை.......

அருள் நிலா வாசன்.
14.09.2015                                      .


Tuesday, 1 September 2015

விட்டெறிந்த தேங்காய்கள்

விட்டெறிந்த தேங்காய்கள்
லாச்சப்பல்
வீதியெங்கும்
சப்பளிந்து கிடக்கிறது
ஏழைக் குடும்பங்கள்
எத்தனையோதொட்டுத் தின்ன
வீட்டில்
சட்டினிக்கும்
வழியின்றிப்
பட்டினியில்
வாழ்க்கை
வெறுந்தரையில்
வெறுக்கிறது

மண்ணுக்காய்
உழைத்தவர்கள்
மழைக்கொதுங்க
மனையின்றி
மாற்று
வழியுமின்றிக்
காற்றையள்ளித்
தின்றுவிட்டு
கடக்கின்ற
நிகழ்காலம்
சிதறிக் கிடக்கிறது
பிள்ளையாருக்கு
பக்தியென்று
போட்டுடைத்த
தேங்காய் போல்....
ஏழைகளை
எட்டி நின்று
ஏழனமாய்க்
குட்டுகின்ற
நிலையற்ற
எதிர்காலம்
ஏக்கத்தில்
மிதக்கிறது
கடைசியில்
என்னவென்று.....
அருள் நிலா வாசன்
1.09.2015