Tuesday, 11 October 2016

உயிரே உனக்காக...

தூக்கம் கலைகிறது
துப்பட்டா நனைகிறது
நீ தொலைவாய்ப்
போனதனால்
...................

இனியெங்கே போவது
எனக்குத் தெரியவில்லை
இருட்டில் நானிருக்கிறேன்
எனக்கான ஒளியாக நீ
தனியாகத்
திரும்பி வரும்வரை

.............


காத்திருந்த கண்களுக்கு
நீ விருந்து வைக்கவில்லை
இருந்தாலும் பூத்திருக்கு
பொழுதொன்றில் வாடாமல்
வழியெங்கும் தேடாமல்
நம்பிக்கையில் பாத்திருக்கு
 
............
 
நீ வெளி நடப்பு செய்தது
என் இதயத்துக்கு தெரியாது
அது இப்போதும்
உன் வரவுக்காய்
தன் கதவைத்
திறந்து வைத்திருக்கிறது..
 

Monday, 10 October 2016

தூங்காத இரவுகள்

உன்னையும் என்னையும்
சேர்த்து வைச்சு
ஊருக்குள்ள
பேசியதெல்லாம்
எனக்கு
மண்
உண்டியலை
உடைசெடுத்த
சில்லறையின் கதையாச்சு

தீர விசாரிக்காமல்
திண்ணையில்’
இருந்து நீ
திட்டித் 
தீர்த்ததெல்லாம்
திகிலூட்டும்
சம்பவங்கள்

திருந்துவாய் என்று
நான்
நேர்த்தியுடன்
தீண்டிவிட்ட
நெய்விளக்குத்
திரிகள் எல்லாம்
உறிஞ்சி எடுத்தது
எண்ணையையும்
என்னையும்

உறிஞ்சிய
நீ எடுத்தாய்
உள்ளதெல்லாம்
உருப்படியாய்
இங்கிருந்த போது

நெரிஞ்சி முள்ளாய்
குத்துகிறது
என் உள்ளம்
உன் சுவாசம்
என் வாசலை
நெருங்காதாவென்று
ஏங்குகின்றபோது

விதி சொன்ன
பாதையிலே
வீடு கட்டிக்
குடி இருக்க
வீதியிலே
கண்ணை வைத்து

தூங்காத இரவுகளில்
தூண்டா மணிவிளக்கில்
துணிவோடு
காத்திருந்தேன்

ஊருக்குத் திரும்பி
வந்தால்
உரிமையோடு
சொல்லி அனுப்பு
நீ சொன்னாலும்
சொல்லாவிட்டாலும்
உனக்கு
நான் தானே
முதல் மனைவி


என்றோ ஒரு நாள்........



காணத் துடித்த
என் விழிகளுக்கு
ஒரு கோணத்தில்
நீ வருவதும்
போவதும்
தெரு ஓரத்தில்
தெரிகிறது

வீணாகிப் போகாது
நீ விண்ணப்பித்த
விடை தேடும்
காரணங்கள்
இடைவெளி கூடும்
நேரங்கள்
இரட்டிப்பாய்
நீழுகிறது
இழுத்து விடும்
என் சுவாசம்

பொழுது விடிந்தாலும்
இருட்டாகிக் கிடக்க
விழுந்து கொண்டுக்கும்
இலைகளைப் பிரிய
விரும்பாத
மரங்களின்
இலையுதிர் காலத்தில்

நேரத்தின் பின்
நேர்த்தியாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
என் வாழ்க்கை

என்றோ ஒரு நாள்
நீயும் நானும்
அதே இடத்தில்
அப்படியே சந்திப்போம்
என்ற நம்பிக்கையில்
இன்றும் ஓடுகிறது
என் கடிகாரம்
தன்
நம்பிக்கையோடு





Tuesday, 4 October 2016

உன் நிழலாக எப்போதும்...

உன் விரல்தொட்டு
உன்னோடு வழிதொடரத்தான்
முடியவில்லை
என் நெஞ்சத் தூழியிலே
ஆடுமுந்தன் நினைவில்த்தான்
இப்போதும்
நெடுநேரம் தூங்குகின்றேன்
நான் திடுக்கிட்ட வேளையிலும்
உன்
விரல் பட்ட புதுமெட்டு
என் காதோடுதான்
உரச
நீமட்டும் இப்போது
தொலைவாகிப் போனாலும்
உன் நிழலாக
எப்போதும்
உன்னோடு தான்
நான் இருப்பேன்.
.
.
அருள் நிலா வாசன்

4,10,2016


                                                                .

இறைவன் எழுதும்...

     
இழுத்துவிடும்
ஒரு மூச்சுச்
திணறடித்து
திரும்பும் திசை
மறந்துவிட்டால்
கழற்றிவிட்ட
செருப்புக் கூட
வழித்துணைக்கு
வராது....

இனிக்குமிந்த
வாழ்க்கையென்று
இரவும் பகலும்
இருட்டடிக்கும்
இறுமாந்த
இன்பங்களின்
ஈர்ப்பு
பாவம்
புண்ணியம்
இரண்டிற்கும்
நடுவில்
இதுவரைக்கும்
இழுத்துவந்த
சுயமான
சுமைகளெல்லாம்
சூட்சுமமாய்
அவன்
கணக்கில்
தப்பாமல் விழும்
அதுதான்
இறுதியாய்
இறைவன் எழுதும்
உறுதியான
தீர்ப்பு.
.
.
அருள் நிலா வாசன்
4,10.2016

உன்னை நான்....

எதிரியாய் உன்னை
நான்
எப்பொழுதும்
பார்த்ததேயில்லை
உதிர்ந்து விழும்
உன் கண்ணீரில்
நான்
கரைந்து போவதால்.
.
.
அருள் நிலா வாசன்

4,10,2016

அவன் இதயத்தில்...

       
தோப்புக்குள்ளே
தேக்குமரம்
தனித்து நிற்பதென்ன
உன் ஏக்கத்தையே
பார்த்துப் பார்த்து
அழுது வடிப்பதென்ன
உன்னை
ஊக்குவித்துப்
பக்கத்திலே
ஊறி
நின்று
பாதியிலே
உறுதியானதென்ன

உருவான
காதலிங்கு
ஊற்றெடுத்து
ஓடியதைப்
பார்த்திருந்த
மரத்துக்கும்தான்
இரக்கம் வந்ததென்ன
மரத்துப்போன
அவனிதயத்தில்
உன்னை
மறந்தபின்னும்
ஓடுவது
ஈரமுள்ள
இரத்தம் தானா என்ன..?
.
அருள் நிலா வாசன்
4,10,2016

பஞ்சு பஞ்சாய்...

மொத்தமாய் நீகொடுத்த
முத்தங்களை நான்
மெத்தையோடு
அணைத்து வைத்திருந்தேன்
அது பஞ்சு பஞ்சாய்
பறக்கிறது
நீ
கெஞ்சிக் கெஞ்சிக்
கொஞ்ச வந்த
காற்றோடு
கலந்து.....
.
.
அருள் நிலா வாசன்

4.10.2016

உன்னை நான்....

மரணத்திலும் உன்னை
நான்
மறக்க மாட்டேன்
ஏனென்றால்
உன்
மனவலியை
நான்
மணந்து கொண்டதால்....
.
.
அருள் நிலா வாசன்

4.10.2016

என்னை விட்டு.....

பிடிவாதமாய்
பிரிந்து போவாயோ
பிரிக்கப் படுவாயோ
அது எனக்குத்
தெரியாது
உன் சுவாசத்தின்
கதகதப்பில்
சுயமாய் இயங்கிய
என் இதயம்
பிறப்பின் எல்லைக்கே
போனாலும்
என்னைவிட்டுப்
பிரிக்க முடியாதது
.
.
உன் நினைப்பு
ஒன்றுதான்.
.
அருள் நிலா வாசன்

4,10,2016

குறும் கவிதைகள்

  • வாடைக்கு எடுத்துவிட்ட
    வாகனம் போல
    ஓடிக்கொண்டுருக்கு
    வாழ்க்கை..
    ..
  • பேசி வந்த கலியாணத்தைப்
    பேட்டி கண்டது
    காதல் கலியாணம்
    நேசிக்கத் தெரியாவிட்டால்
    வாசிக்கத் தெரியாத
    வீணையை வீட்டிற்குள்
    பூட்டி வைத்து
    என்ன பலன் என்றது...

  • ஓடிப்போன காதல்
    ஜோடி
    திரும்பி வந்தது
    சீதனம்
    தேடி..
  •  

  • திட்டிப் பார்த்தேன்
    நீ
    திருந்தவில்லை
    திட்டியபின்
    திரும்பிப் பார்த்தேன்
    உன்னைக்
    காணவில்லை
    என் கட்டிய
    மூச்சின்
    காய வரிகளைக்
    கேட்டதெல்ல்லாம்
    .
    .
    என்னைக் கட்டி
    அணைக்கும்
    .
    இந்தக்
    காற்றுத்தான்....
    .

.

தீண்டும் உந்தன் நினைவலைகள்



நீண்டு போன
இடைவெளியில்
தீண்டும்
உந்தன் நினைவலைகள்
மீண்டும் ஒரு
அடைமழையில்
மீண்டும்
எந்தன்
நெஞ்சாங் குழியில்.

.
அருள்நிலா வாசன்..
4.10.2016

முதுமையின் முகவரி

     
கடந்து போன காலங்களின்
கண்ணிறைந்த காட்சியெல்லாம்
கரை காண வந்த அலைகள்போல
வந்து வந்து போகுது

நடந்து வந்த பாதையெல்லாம்
திரும்பிப் பார்க்கத் தோன்றும்போது
நமக்கென்று யாருமில்லையென்ற
நினைவு வந்து மோதுது
விரும்பி வாழ்ந்த வாழ்க்கையெல்லாம்
வீணாகிப் போச்சுதென்று - மனதில்
விட்டுப் போன கவலைகளும்
அரும்பி வந்து தாக்குது
பெற்றெடுத்த செல்வங்களுக்கு நான்
இப்போது செல்லாத காசுதான் - அவர்கள்
பேரின்பமாய் வாழ்ந்தாலும்
முதியோரில்லம்தான்
என் முதுமையின் முகவரி...

4.10.2016

இழப்பதற்கு இனியெதுவுமில்லை

இழப்பதற்கு எதுவுமில்லை
உசிரு மட்டும்
இருப்பிருக்கு
ஈரவிழி நிறைஞ்சிருக்கு
இரக்கப்பட யாருமில்லை
இடர் படர்ந்த
வாழ்க்கையினைக்
கடந்து வந்த
பாதையெல்லாம்
நெரிஞ்சி முள்ளாய்
குத்திடிச்சு

காலுக்குச் செருப்பில்லை
காய்ந்த வயிற்றில்
பாலையூற்ற
சொந்தத்திற்கு விருப்பில்லை
கஷ்டத்தில் நானென்று
என்னைக் கழட்டிவிட்ட
பாச பந்தத்திற்கு
எந்தப் பொறுப்புமில்லை
பின்னடிக்குத் தேவையென்று
பிடித்து வைக்க நினைத்திருந்தால்
பிள்ளைகளைப்
படிக்க வைக்க
வட்டிகெடுத்த
பணத்திலேயே
பெரிய வீடு கட்டி
நானும்
வாடகைக்கு
விட்டே
என்
வயிற்றைக் கழுவியிருப்பேன்..
இழப்பதற்கு இனியெதுவுமில்லை
உசிரு மட்டும்
இருப்பிருக்கு....
.
4.10.2016

நீயும்......

அயர்ந்து சோர்ந்த பொழுதுகளில்
நீயாகத் தேடி வருவாய்
துயரத்தைமட்டும்
துணிச்சலாய்ப் பகிர்வாய்
உனக்கு நிழலாய்
எப்பொழுதும்
நானிருந்தேன்
இருக்கும் பொழுதுகளில்
உரிமைபோல்
உருவி எடுத்தாய்
எழுந்து போனபொழுதில்
என்னிடம்
எதுவுமே சொல்லாமல்
போய்விட்டாய்
அப்பவும் இப்பவும்
எப்பவும்
நான் தனியாக
இருப்பதுமட்டும்
உனக்குத் தெரியாமல்
.
.
நீயும் மரம்தானா..?


4.10.2016