Monday, 10 October 2016

தூங்காத இரவுகள்

உன்னையும் என்னையும்
சேர்த்து வைச்சு
ஊருக்குள்ள
பேசியதெல்லாம்
எனக்கு
மண்
உண்டியலை
உடைசெடுத்த
சில்லறையின் கதையாச்சு

தீர விசாரிக்காமல்
திண்ணையில்’
இருந்து நீ
திட்டித் 
தீர்த்ததெல்லாம்
திகிலூட்டும்
சம்பவங்கள்

திருந்துவாய் என்று
நான்
நேர்த்தியுடன்
தீண்டிவிட்ட
நெய்விளக்குத்
திரிகள் எல்லாம்
உறிஞ்சி எடுத்தது
எண்ணையையும்
என்னையும்

உறிஞ்சிய
நீ எடுத்தாய்
உள்ளதெல்லாம்
உருப்படியாய்
இங்கிருந்த போது

நெரிஞ்சி முள்ளாய்
குத்துகிறது
என் உள்ளம்
உன் சுவாசம்
என் வாசலை
நெருங்காதாவென்று
ஏங்குகின்றபோது

விதி சொன்ன
பாதையிலே
வீடு கட்டிக்
குடி இருக்க
வீதியிலே
கண்ணை வைத்து

தூங்காத இரவுகளில்
தூண்டா மணிவிளக்கில்
துணிவோடு
காத்திருந்தேன்

ஊருக்குத் திரும்பி
வந்தால்
உரிமையோடு
சொல்லி அனுப்பு
நீ சொன்னாலும்
சொல்லாவிட்டாலும்
உனக்கு
நான் தானே
முதல் மனைவி


No comments:

Post a Comment