Friday, 19 June 2015

விதியிருந்தால் மறுபடியும்....

மறுபடியும்
மௌனம் கலைகிறது
பேசத்துடித்த
உன் வார்த்தைகளை
பேசாமல்
நான் தடுத்தேன்..

எத்தனை மணி
சென்றாலும்
இடத்தை விட்டு
நகரமாட்டேன்
ஏதோவொரு
நம்பிக்கை 
உன்னிடம் மட்டும்
ஊன்றிக்கொண்டு
இருந்தது...


ஏக்கமாய் நீயும்
வெக்கத்தில் நானும்


என்னோடு வந்துவிடு
வார்த்தைக்குள்
பிறந்த
அன்பின் ஆழம்
உன் ஏக்கத்தில்
தெரிந்தது

மானத்தை
மறைக்கத்
தன்
மானம் மட்டும்
தனிவழிக்குத்
துணையாக
வீதி விளக்கில்
துணிவாக நானும்
இருந்தாலும்
இன்று
உன் பேச்சைக்கேட்டால்....

ஓடிப்
போனவளென்றுதானே
ஊர்
என்னைச்சொல்லும்....

வியர்க்கிறது
உனக்கு
கொஞ்சம்
துடைத்துக்கொள்

வெளி நாடு போன
அண்ணை
விசா கிடைத்தால்
ஊருக்குத்
திரும்பி வருவான்..

நீ விரும்பியபடி
நானும்
இதே பெயரில்
இந்த ஊரில்
நாமிருந்தால்
முறையோடு
கேட்டுப்பார்

உன் பெயரும் என் பெயரும்
காகிதத்தில் ஒன்றுசேர்ந்து
என் கையெழுத்தய் மாற
உனக்காகக்
காத்திருப்பேன்
நீங்காத நினைவுகளை
சேர்த்து வைத்த
இவ்வீதியிலே
பிரிந்தாலும்
விதியிருந்தால்
சந்திப்போம்
மறுபடியும்......

அருள் நிலா வாசன்
19.06.2015
                                                 ,

Tuesday, 16 June 2015

சொல்லத் துடிக்குது

அலங்கார நகரத்தில்
அடுக்கி வைத்த
கட்டிடத்தில்
எங்கென்று தேடுவது...

உன் முகம்மட்டும்
முகவரியாய்
இன்றுவரை
என்னிடம்
என் தொலைபேசி
அடித்தாலும்
எடுக்கத் தடுக்குது
என் மனம்
அது
என் வீட்டுநம்பரோ
என்று...

உன் குரல் மட்டும்
ஒரு தடவை
என் தொலைபேசியில்
எனக்காக
ஒலிக்காதா.?
இது தான்
என் கடைசிஆசை....

 இனி செல்லாத
என் காதல்
இருந்தாலும்
சொல்லத்தான்
 நினைக்கின்றேன்
இதுவரை
உயிருக்குள்
உயிராக
என்னோடு
வாழ்ந்த காதல்

மாதங்கள்
நாட்களாகின்ற
போதிலும்
சொல்லத் துடிக்குது
என் இதயம்
இறுதியாக
 ஒரு தடவை 
உனக்காகக்
துடிக்கும் வரை....

.
.
அருள் நிலா வாசன்
16.06.2015                                    .


Sunday, 14 June 2015

அது நீதானா

பரபரப்புக்களைத்
தள்ளிவிட்டுப்
பலமணி நேரம்
பக்கத்தில்
என்னையே
பார்த்துக்
கொண்டிருந்த
ஒற்றைக்
கதிரையின்
நட்பை
ஏற்று

அதனருகே
உட்கார்ந்து
உள்ளே 
இழுத்துவிட்ட
சுவாசத்தைக்
கவனித்துக்
கொண்டிருந்தேன்...

மௌனத்தைக்
கலைத்து
மனம்விட்டுப்
பேசக் 
காத்துக்கிடந்த
அந்த சில 
மணித்துளிகள்

வீணாகிப் போக

இதுவரை
காத்திருந்த
எண்ணங்களை
நிறம் மாறிப் போக
நிம்மதியை
இழுத்துக் விழுத்தி
இன்னும் ஏதேதோ
 நெஞ்சை அழுத்த
எங்கோ தூரமாய்
கேட்டது
உன் குரல்...

திறந்து வைத்த
சாளரத்தின்
உள்ளே
வந்த
இதமான
தென்றல்
காற்று
அனுமதிகேட்டு
என்னைத்
தொட்டது...

திரும்பிப் பார்த்தேன்
விரும்பியே
உன்னை
வெறும் கனவாயின்றி
நிஜமாய்
அது நீதானா என்று....
                                             

தெளிவாகத் தெரிகிறது

கிட்டிய தூரத்தில்
நீயிருப்பது
தெரிந்தாலும்
கைதட்டிக் கூப்பிட
ஒருபோதும்
முடிவதில்லை

ஒட்டியே வந்திருக்கச்
சொல்லியே
வைத்ததுபோல்
எங்கிருந்தோ
வந்திருந்து
எத்திசையும்
எதிரொலிக்க
ஒத்திகை பார்க்கும்
ஜோடிக்கிளிகளின்
ஜொள்ளுப் பாசையில்
அள்ளித் தெளிக்கிறது
அன்பின் வேதம்...

எட்டியே இருந்தாலும்
தொட்டுப் பேசாத
உன்னன்பின் 
வேதம் 
புதிதென்று
என்னுள்ளே
ஒரு,நாதம்
இன்றைக்கும்
எதிரொலிக்க...

வெட்டியே போட்டாலும்
ஒட்டிக் கொள்ளும்
உன் அன்பில்
நான் நனைந்து
உறக்கத்தைத்
தள்ளிவைக்கும்
உன் நினைவுப்
புள்ளிகளில்....

வெள்ளிப் பாத்திரத்தில்
வெளிச்சத்தில்
அடி தெரிய
விளிம்புவரை
அள்ளிவைத்தேன்..

தெளிவாகத் தெரிகிறது
தண்ணீரில்
உன் முகம்
நான் 
எட்டிப் பார்த்தபோது..

                                             .

Thursday, 4 June 2015

சொந்தமும் பந்தமும்.

பட்டம் பதவி
பணம் புகழ்
கைவசமிருந்தால்

பந்தம் பாசம்
பன்மடங்காகி
பின்னிப் பிணைந்து
நாடி பிடித்துக்
கூடித் திரிய
பின்னாடியே
வரும்....

கஷ்டம் நஷ்டம்
கரைத்துக் குடித்துத்
திட்டம் போட்டுத்
திருந்திய
வாழ்வு
விரும்பியபடி
வாழத்துடிக்கும்
நேரம்

நோயின் பிடியில்
நரம்பும்
உணர்வும்
நலிந்து போனால்
பேச்சுத்
துணைக்குக் கூட
துணையாய்
இருக்க
ஊரும் உறவும்
விரும்பாது....

சொத்தும் சுகமும்
சுரண்டும் வரைக்கும்
சோடனை போட்டு
சொர்க்கத்தைக் காட்ட
வாரி அணைக்க
வரிசையில் 
நிற்கும்
சொந்தமும் பந்தமும்.

நோயும் நொடியும்
நெருங்கிய
வாழ்வில்
நொந்தபின் தான்
ஞானக் கண்கள்
திறக்கும்
இதை
நன்றி யுள்ள
நாய்
கூடச்  சொல்லும்
உன்
வாழ்க்கை
இது தானென்று....
                                             ,

Wednesday, 3 June 2015

நீ எனக்குத் தானென்று......

உள்ளே இழுத்துவிட்ட
சுவாசத்தை
அள்ளிக்கொண்டு
என்னைத் கிள்ளிவிட்டுச்
சென்ற சில்லென்ற
இளம்காற்று
உன் மீது தொட்ட போது
என்னதான்
சொன்னதோ..?

அது திரும்பி வந்தபோது
என் உதடுகளை
நனைத்தபடி
நீதான் தந்ததாக
உறுதியோடு
சொன்னது....

உன் நிழலாடும்
நெஞ்சுக்குள்
நிசப்தத்தைக்
கலைக்க
நெடுனேரம்
பறக்கிறது
பட்டாம் பூச்சி...

உன் சுவாசக் காற்றில்
கலந்துவிட்ட
என் மூச்சில்
உன் நினைவுகள்
என்னை
முழுதாய்
நனைக்கிறது
முதல் மழையாய்
பனித்
துளித்துளியாய்...

உன்னைத்
தீண்டிய காற்றுக்குள்
நீ திணித்து விட்ட
உள்ளன்பு
சொல்லாமல்
சொல்கிறது
நீ எனக்குத்
தானென்று......
03.06.2015




https://youtu.be/PcOC5L_KPfI


Tuesday, 2 June 2015

ஒரு தடவை படித்துப்பார்

என் இதயச்சுவரில்
நீ எழுதி
மாட்டியதை
நேரம் இருக்கும்போது
ஒரு தடவை
படித்துப்பார்

அது உன் 
மறதிக்கு
மருந்து கொடுக்கும்

இன்னொரு தடவை
அப்படிச் 
சொல்லாதே
இனியும் தாங்காது
என் இதயம்

உன் இதயத்தை
துல்லியமாய்
படம் பிடிக்கச்
சொல்லு
அதிலொரு பிரதியை
எனக்கும் கொடு

என் கல்லறையில்
உன் கடைசிப் 
பரிசாகவே
அது என்னோடு
இருக்கட்டும்.......