Wednesday, 22 July 2015

பிரிந்து வந்த துணையைத் தேடி

உருக்குலைந்த
மனதோடு
ஊருக்கே போகத்துணிந்து
உடுப்பு மடித்து
வைத்த கைகள்
உழையத் தொடங்கியது

சத்தமின்றித் திறந்த
கதவை
உத்துப் பார்த்த
என் கண்கள்
 உருண்டு
உன்னை 
விழுங்கியது

எங்கிருந்தோ
எனக்குள்
வந்த அந்த
ஒரு உற்சாகம்
எல்லை மீறியே
எட்டியே பார்த்தது

எப்படியோ
அதைக்
கேட்டுவிடலாமென்று
துடித்த என்
வாயைக்
கட்டிப்போட்டது
வியர்த்துப் போன
உன் கண்களில்
உதிர்ந்து
விழுந்த 
ஈரப் பார்வை....

மூடிக் கொண்டிருந்த
வானம்
முழுசாய் 
கொட்டுமுன்னர்
படித்து முடித்தேன்
நீ சொல்ல வந்த
வாசகத்தின்
முகவரியை....

நீ 
எனக்கு மட்டும்
சொல்ல வந்த
இதுவரைக்கும்
சொல்லாத
அந்த
உள்வீட்டு
ரகசியத்தை
ஊருக்கே 
சொன்னபோது

ஊரூராய் பறந்த
அந்த பிரியமுள்ள
ஊர்க்குருவி
பிரிந்து வந்த
துணையைத் தேடி

ஊரைவிட்டே பறந்தது......   



உனக்கென இருந்த என் மனம்

ஒடுங்கிய இரவுக்குள்
ஒத்தையாய்
நான்
உன்னை மட்டும்
தேடினேன்

ஒற்றைத் தாளில்
நீ எழுதி மடித்துக்
கதவின் இடுக்கில்
சொருகிய நேரம்

எட்டிப் பார்த்தது
உள் வீட்டில்
என்னைத்தேடிய
உன் கடிதம்

அதுசொன்ன
சோகத்தில்
வடிந்த  ஈரத்தில்
ஊறிப் போனவை
நான் எடுத்துப்பிடித்த
இடத்தில்
பிரிந்தே கிளிந்தது
சில வரிகள்

உற்றுப் பார்க்கின்ற
போதே
பாதி மறைந்தது
தேடிப்படிக்கின்ற போது
ஒன்றுமே சொல்லாமல்
ஓங்கிஅறைந்தது
எஞ்சியிருந்த வரிகள்......

 திருப்பமில்லாத
உன் ஒருவழிப் பயணத்தை
உணரத்தெரியாத
உனக்கென
இருந்த
என் மனம்

இன்னும்
நம்பிக்கை
இழக்காமல்.....

விரைந்து
மூடினேன்
யன்னல்களை
விளக்கை
ஏற்றினேன்
வெளிச்சத்தில்
உன் முகம்பார்க்க.......

காற்றுத் தள்ளித்
திறந்தவாசல்க்
கதவை 
நான்
வெறுப்போடு
பார்க்கின்றேன்
காற்று
அது மட்டும்
தனியாக
வந்ததனால்......


நீமட்டும் என்னோடு

ஒரு வேளை
சோற்றுக்கு
நான்
ஒட்டறை 
அடித்த போதும்
என் கைப்பிடியிலிருந்து
உன்னை
நான் விடவேயில்லை...
என் வழிப் பாதையில்
குத்திய முட்களை
உனக்கு
நான்
கூட இருந்தும்
காட்டவே இல்லை

உன்னை
அது வருத்துமோ
என்ற
வருத்தம் தான்
எனக்கு
அப்போதிருந்தது..

இப்போது மட்டும்
எனக்கென்ன குறை
நீமட்டும்
என்னோடு
இருந்திருந்தால்.......

அதை
சொல்லத் துடிக்கும்
மனசுக்குள்
சொல்லாமலே
துடிக்குது
என் இதயம்
இன்னும்
உனக்காகத்தான்.....

Friday, 10 July 2015

இலக்குகளை நோக்கி....

இலக்குகளை வைத்து
இரையினை
இழுத்து விழுத்த
இலட்சியமாய்
நினைப்பதில்லை
இரை தேடும்
பறவைகள்....

இறக்கையில் வைத்த
இரட்டிப்பு
நம்பிக்கையில்
இடம்பெயர
நேர்ந்தாலும்
வழி தவறிப்
போவதில்லை....

வேளை பார்த்து
வந்த பசியால்
வெந்து வயிறு
வேகமாய் எரிந்தாலும்
விழுந்துகிடக்கும்
வித்துக்களை
வீரமாய்
பொறுக்கி எடுக்கும்
வில்லத்தனம்
விரும்புவதில்லை....

பொருந்தி வாழப்
பொறுமையும்
அருந்தி உணவு
உண்ண மட்டும்
வாயைத் திறந்து
ஊக்கத்தில் எட்டும்
வானில் பறந்து
விண்ணையும் தாண்டி
வாழுது
இலக்குகளை நோக்கி....

அருள் நிலா வாசன்.
10.07.2015                            .


இன்றைக்கு இது போதுமென்று

பகலெல்லாம் பாதையோரம்
பாடிக் கழைத்தவனின்
ஆதார சுருதியில்
பலரின் கதை
அதே  வீதியில்
விதியோடு
ஒட்டிக்கொண்டிருந்தது

கைவிரல்களின்
இழுவைக்குள்
அவன்
கொண்டுவந்த
சங்கதிகள்
இழுத்துக் 
கொண்டுவந்த
ஆனந்த ராகம்...

நேரத்தின் பின்னால்
அவசரமாய்ப் 
போனவர்களை
இழுத்துப் பிடித்துச்
சில்லறைகளைச்
சிதற வைக்க

விரித்து வைத்த
துணியில் 
சிரித்துக் கிடந்த
வெள்ளி நாணயங்கள்
வேகமாய் வந்தவரின்
சிந்தனையைச்
சீராகக் கிளறிவிட

இன்றைக்கு
இது போதுமென்று
போலிக்
காலையெடுத்துப்
பொறுமையோடு
பொருத்தியவன்

கூடு திரும்பும்
குருவிகளின்
கூட்டு இசையில்
வீடு திரும்பும்
நேரத்தைத்
தெளிவாய்
தெரிந்து கொள்கிறான்
பார்வையே இல்லாதவன்...

அருள் நிலா வாசன்
08-07-2015                                       ,

Wednesday, 8 July 2015

என் தாலியைத் தேடி

கடைக்காரனின்
கணக்கும்
அவனடித்த
சரக்குப்போல
கணக்கு
வழக்கில்லாமல்
ஏறிக்
கொண்டிருக்கிறது

சீனி பருப்பெல்லாம்
சில்லறைக்கு
வாங்கினாலும்
வேணுமென்றே
கடைக்காரன்
கட்டித் தந்த
கிழிஞ்ச 
கடதாசிப்பையில்
வழி வழியே
கொட்டியது போக
என் கையில்
கிட்டியது
கொஞ்சம்தான்...

எத்தனை
நாளுக்குத்தான்
பாணும் பருப்புக்கும்
வெறும்
தேத்தண்ணிக்கும்
உள்ளங்கையை
நக்குவது..

துலைஞ்சு போன
என் புருசன்
நான்
தூங்கிச்
செத்தாலும்
என் தாலியைத்
தேடி வருவானோ..?
தன் மனைவி
முகத்தைத்
தேடுவானோ..?

துண்டு போட்ட
தலையோட
எந்தத்
தூணைத்
தடவுறானோ..?

கடனாக வேண்டி
நேற்றுப்
கண்ணை மறைக்கப்
போட்டது
இன்னும் 
தலையை
விட்டுஇறங்காமல்...
.
.
அருள் நிலா வாசன்
(01.07.2015)                                 .

Saturday, 4 July 2015

வார்த்தைகளே தேவையின்றி

ஈரப் பெருவெளியில்
குறுகிய நேர
இடைவெளிக்குள்

ஏற்றத் தாழ்வுகளோடு
வெகுதூரம்
பறந்தாலும்
சின்னச் சிறகில் 
வைத்த
பெரிய
நம்பிக்கையில்

சுயமாய் தேடும்
வாழ்க்கையைச்
சுதந்திரமாய் வாழும்
பறவைகள் 
கொட்டிக் கிடக்கும்
இயற்கையைத்
தட்டிப்பறிக்காமல்
பேச்சு வழக்கு
இன்றி
பேரழகாய்
வாழுது

உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்ளும்
வார்த்தைகளே
தேவையின்றி
ஒலிமட்டும்தான்
அதன் 
மொழியென்பதால்....

அருள் நிலா வாசன்
05.07.2015                                  .