Friday, 10 July 2015

இன்றைக்கு இது போதுமென்று

பகலெல்லாம் பாதையோரம்
பாடிக் கழைத்தவனின்
ஆதார சுருதியில்
பலரின் கதை
அதே  வீதியில்
விதியோடு
ஒட்டிக்கொண்டிருந்தது

கைவிரல்களின்
இழுவைக்குள்
அவன்
கொண்டுவந்த
சங்கதிகள்
இழுத்துக் 
கொண்டுவந்த
ஆனந்த ராகம்...

நேரத்தின் பின்னால்
அவசரமாய்ப் 
போனவர்களை
இழுத்துப் பிடித்துச்
சில்லறைகளைச்
சிதற வைக்க

விரித்து வைத்த
துணியில் 
சிரித்துக் கிடந்த
வெள்ளி நாணயங்கள்
வேகமாய் வந்தவரின்
சிந்தனையைச்
சீராகக் கிளறிவிட

இன்றைக்கு
இது போதுமென்று
போலிக்
காலையெடுத்துப்
பொறுமையோடு
பொருத்தியவன்

கூடு திரும்பும்
குருவிகளின்
கூட்டு இசையில்
வீடு திரும்பும்
நேரத்தைத்
தெளிவாய்
தெரிந்து கொள்கிறான்
பார்வையே இல்லாதவன்...

அருள் நிலா வாசன்
08-07-2015                                       ,

No comments:

Post a Comment