Wednesday, 22 July 2015

பிரிந்து வந்த துணையைத் தேடி

உருக்குலைந்த
மனதோடு
ஊருக்கே போகத்துணிந்து
உடுப்பு மடித்து
வைத்த கைகள்
உழையத் தொடங்கியது

சத்தமின்றித் திறந்த
கதவை
உத்துப் பார்த்த
என் கண்கள்
 உருண்டு
உன்னை 
விழுங்கியது

எங்கிருந்தோ
எனக்குள்
வந்த அந்த
ஒரு உற்சாகம்
எல்லை மீறியே
எட்டியே பார்த்தது

எப்படியோ
அதைக்
கேட்டுவிடலாமென்று
துடித்த என்
வாயைக்
கட்டிப்போட்டது
வியர்த்துப் போன
உன் கண்களில்
உதிர்ந்து
விழுந்த 
ஈரப் பார்வை....

மூடிக் கொண்டிருந்த
வானம்
முழுசாய் 
கொட்டுமுன்னர்
படித்து முடித்தேன்
நீ சொல்ல வந்த
வாசகத்தின்
முகவரியை....

நீ 
எனக்கு மட்டும்
சொல்ல வந்த
இதுவரைக்கும்
சொல்லாத
அந்த
உள்வீட்டு
ரகசியத்தை
ஊருக்கே 
சொன்னபோது

ஊரூராய் பறந்த
அந்த பிரியமுள்ள
ஊர்க்குருவி
பிரிந்து வந்த
துணையைத் தேடி

ஊரைவிட்டே பறந்தது......   



No comments:

Post a Comment