Wednesday, 16 September 2015

நாளை முதல் குடிக்க மாட்டேன்

மேகம் இறங்கி வந்து
கூரையில
உட்கார்ந்தது போல்
மூடிகொண்டது
முகில் கூட்டம்
மப்பும் மந்தாரமுமாய்....

முழு நீளக்
கும்மிருட்டில்
கூச்சலிட்டுக்
குமிறிக் கொண்டு
வந்த
கூனல் விழுந்த
குடும்பத்
தலைவர்
அவர்
கைக்கடிகாரம்
காட்டிய நேரம்
இப்போதுதான்
எட்டுமணி..
பகல் முழுதும்
மதுவின் மயக்கத்தில்
அது ஓடாமல்
நின்று போனதும்
தெரியாமல்.....

பற்றைக்குள் 
ஒளித்து வைத்த
பகலிறக்கிய
கள்ளு முட்டியின்
பச்சை வாசத்தை
இப்போதும் தேடுகிறார்...

மெட்டறுந்த 
பாட்டு வேற
பாகவதர் போல
ரோட்டையே
சொந்தமாக்கி
குறுக்கும் நெடுக்குமாய்
குந்தி எழுந்து
நடை பழகி

வீடு வந்து
சேர்ந்த போது
நாய் கூட 
மதிக்கவில்லை
நக்கலாய் சிலிர்த்தது
குடிகாரனென்று....

நாளை முதல் 
குடிக்க மாட்டேன்
நன்றியுள்ள நாயே....

வீட்டுக்கு வெளியே
விழுந்து படுத்தவர்
இன்னும்
எழும்பவே இல்லை
பின்னிரவும்
தாண்டி
நண்பகலில்
நடு முற்றத்தில்
நாளைய கனவுடன்...

குடிகாரன் பேச்சு
அவருக்கே
  விடிந்தால்தான் தெரியும்...

அருள் நிலா வாசன்
16.09.2015                                       






No comments:

Post a Comment