Thursday, 28 May 2015

காற்றை அள்ளித் தின்றுவிட்டு

பள்ளிக்கு வந்தேன்
பரபரப்பாய் என்
பகல்வேளைப்
பசி தீருமென்று.....

பட்டினியாய் 
விட்டில்
பரிதவிப்பாய் 
சின்னத்
தங்கையும்
என்
அன்னையும்
பகல்தான் எப்படி
நகருமென்று

பகலவன் மட்டும்
வந்து வந்து 
போகின்றான்
பாசமாய் நின்று
வெந்து  நொந்து 
போகின்றான்


அயலவன் மட்டும்
அறியவில்லை
அடுப்படியில் 
பூனையும்
பானையும்
தூங்கும் வரையும்
அடுப்பில் எதுவும்
புகையவில்லை
அம்மா வயிறுமட்டும்
புகையுதென்று

இங்கு
தட்டில் இட்ட 
சோறுமட்டும்
கனமாய்
எனக்கு தெரியுதம்மா
காற்றை அள்ளித்
தின்றுவிட்டு
தண்ணியை நீ
குடிப்பாய் என்று...

28.05.2015




No comments:

Post a Comment