Tuesday, 12 May 2015

தனி வழிக்குத் துணையாய்.......

எமக்குள் எழுகின்ற
எண்ணங்கள்
யாவும்
எமக்காக
நாம் வரைகின்ற
வண்ணக்
கோலங்கள்....

விதைத்ததைத்தானே
அறுக்கச் சொல்லிப்
படைத்தவன்
எம்மை
பணிக்கின்றான்.... 

மேகம் விட்ட
கண்ணீரெல்லாம்
மலையைத் தொட்ட
பன்னீராகி
இசையின்  அசைவொடு
விரையும் 
ஆற்றின்
அதிர்வைக் கேட்டு
வித்தை காட்டி
விரசிக்
கொள்ளும்
மரங்கள்...

அங்குமிங்கும்
ஆடி அசைந்து
கரையைத்
தொட்டுக்
கடந்து செல்லும்
ஆற்றைக் கண்டு
தலையசைத்து
அதுபாட்டிற்கு
வழியனுப்ப....

நீண்ட பயணத்தின்
முடிவைத் தேடி
ஓடுகின்ற
ஆற்றைப் போல
நாளும் பொழுதும்
ஓடிக் கழைக்கும்
நானிலத்தில்
மானிடர்க்கு
இழப்பதற்கென்று
இவ் உலகில்
எதுவுமே இல்லை...

தனி வழிக்குத்
துணையாய்
கூட்டிச் செல்லும்
ஓடி ஓடிச்சேர்த்துக்
கொண்ட
புண்ணியமும்
பாவமும்....

அருள் நிலா வாசன்
12.05.2015                                


No comments:

Post a Comment