Friday, 4 March 2016
வாடிக்கைதானோ என்று.
பாதை மாறிவந்த
பதட்டத்தில்
படலையைத் தள்ளிவிழுத்தி
உள்ளே நுழைந்தது
சுழன்று வந்த
ஊதக் காற்று...
இதுதான்
சாட்டென்று
சத்தமேயில்லாமல்
சரிந்து படுத்தது
பார்த்துகொண்டிருந்த
பட்டமரம்..
பக்கத்தில் நின்ற
பனைமரமும்
தன் பங்கிற்கு
பாழையைக் களட்டிக்
கீழே போட்டது..
பாழை விழுந்த சத்தத்தில்
திடுக்கிட்ட
தரையில் நின்ற அணில்
தாவிப் பாய்ந்த
மாமரத்தில்
பழுத்திருந்த மாம்பழம்
பக்கத்தில் சொல்லாமல்
தொப்பென்று
விழுந்தது....
மாம்பழத்தை எடுக்க
வந்தவளின்
அவசரத்தில்
படிக் கல்லுக்கும்
பங்கிருந்து
தடக்கியவள்
சாரீரம்
சறுக்கி விழுந்தது..
விழுந்தவளைத் தூக்கிவிட
வீட்டுக்குளிருந்து
ஓடி வந்தவனைப்
பார்த்து
வாடிக்கைதானோவென்று
படலைக்குள்
வந்த கிழவி
பட்டென்றுகேட்ட
கேள்விக்கு
வெட்டி வேரு வாசம்
விடலைப் பிள்ளை நேசம்
வானலையில்
பாட்டு
மறுபடியும்
காற்றோடு
வீம்பாய் கலந்தது
.
.
அருள் நிலா வாசன்
04.03.2016
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment