Wednesday, 24 February 2016

உன் முகம் மட்டும்

மனசும் மனசும்
ஒட்டுமென்று
என் மனசை எல்லாம்
பேப்பரில் கொட்டி
சோறு பூசிக்
கவரில் ஒட்டி
சொந்தங்கள்
யார் கண்ணும்
என் மீது படாமல்
பெட்டியினுள்
நான் தள்ளிவிட்ட
என் ஆசைக் கடிதம்..

காப்பு வளையல்
கொலுசென்று
கம்பு வித்து
வாங்கி வைத்தேன்
கண்ணாலம்
காட்சியென்று
கைபிடிக்கும்
நேரமதில்
கண்ணூரு படாமல்
பேச்சியம்மனிடம்
வாய் பேசாமல்
வேண்டிக்கிட்டேன்...

சோப்பு சீப்பு
கண்ணாடி
சொண்டு சிவக்க
வாய் பூச்சு
கையோடு வாங்கிவரக்
கண்ணாளா
உன்னிடம்
காசு இருக்கா
தெரியலயே...

உன்னைத் தேடி வரத்
துணிவுமில்லை
என் கடித்ததுக்கு
பதிலுமில்லை
ஊருக்கு வரும்
பஸ் எல்லாம்
ஏறி இறங்கிப்
பார்க்கிறேன்.

என் நினைவில்
இருக்குமந்த
எனக்கான
உன் முகத்தை மட்டும்
இதுவரைக்கும்
காணலையே..



என்னை உனக்கு
நினைவிருக்கா......?

அதுவும் தெரியலயே..?
.
.

23.02.2016

No comments:

Post a Comment