தொட்டிலை ஆட்டிவிட்டு
தொலைவாய்
தெரிந்த
நிழல் கண்டு
மீண்டும்
அடிவாங்கத்
தயாராகிறாள்...
தூங்காத பிள்ளைக்கு
பசியென்று
தெரிந்தும்
துணியை நனைத்து
வாயில் பிழிந்து
விடுகின்றாள்
பச்சைப்
பிள்ளைக்கு
பச்சைத் தண்ணீர்....
ஊரே அடங்கிப்
போயிருந்தும்
அவனுக்கு
இன்னும்
அடங்கவில்லை....
கால் இரண்டும்
பின்னப் பின்ன
பின்னிரவில்
தேடுகின்றான்
தன்
வீட்டின் வாசல் படி...
வந்தும் வராததுமாய்
அதே
வாடை அடிக்கிறது
தட்டில்
வைக்கிறாள்
தெண்டல் சோறு
எங்கயடி மீன் குழம்பு..?
ஒட்டிப் போன
தன்
வயிற்றை
தடவிப் பார்க்கின்றாள்
எனக்கு
வாய்க்கரிசி
எப்ப வந்து விழுமோ...
எழுந்து நடக்கின்றாள்
இன்னொரு
பொழுது விடிந்தது.....
அருள் நிலா வாசன்

No comments:
Post a Comment