நீண்ட அமைதிக்குப் பின்
அப்படி ஒரு அவலம்
நிமிர்ந்து பார்க்குமுன்
நிலத்தில் விழுந்தாள்
மூச்சு அடங்கி
மீண்டும் எழுந்தாள்
முகமெல்லாம் காயம்
இரத்தக் கசிவில்
ஆடை சிவந்தது
ஆவென்று திறந்திருந்த
கதவின் வழியாக
அவளின் நிம்மதி
அவசரமாய்
வெளியேறியது
போன உயிரைத்
துரத்திப் பிடித்தவள்
தூக்கில் தொங்கவும்
துணிந்தாள்
ஆனாலும்
முடியவில்லை
குறுக்கே தடுக்க
வந்த
குற்ற உணர்வை
இழுத்து வைத்து
குலுங்கிக் குலுங்கி
அழுதாள்
கூடவே இருந்த
விடுதலையுணர்வை
குறி வைத்துச்
சுட்டாள்
குலைத்துக் கொண்டிருந்த
நாய்
முட்டாள்
ஆனதுபோல்
கிட்ட வந்து நின்று
அமைதி காத்தது
விடியாத தேசத்தை
விடுவிக்கப்
போனவள்
விதையொன்றைச்
சுமக்கின்றாள்
அழித்து எழுத
முடியாமல்
அழுத்தி எழுதிய
தாய்மொழி
தெரியாத
அந்தச் சின்னக்
கவிதை
சொல்லப் போகும்
அவளின்
சோக வரலாறு..
.
.
அருள் நிலா வாசன்
2.12.2015 .

No comments:
Post a Comment