Friday, 16 October 2015

சயிக்கிள் செயின்

 அதிகாலை நேரம் அலாரம் அடிக்க முன்னரே அவள் எழுந்து உட்கார்ந்தபடி சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் நாலுமணியை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது. படுத்த பாயைச் சுருட்டி பக்கத்து அறையில் வைத்துவிட்டு., படக்குப் படக்கென்று நடக்க வேண்டியவைகளை எல்லாம் நல்லபடி நடத்திவிட்டு, அம்மா காய்ச்சி வைச்ச ஆட்டுப் பாலில் போட்ட அண்ணா கோப்பியை., ஊத்தி ஆத்தாமல் ஊதி ஊதி குடிச்சுப் போட்டு மறுபடியும் நேரத்தைச் சரி பார்த்தாள். தேங்காய் திருவ இப்ப நேரம் போதாது. போயிட்டு வந்தும் திருவலாம் தானே.

சந்திக்குச் சந்தி நின்று சங்கதிகள் தாங்கிவரும் இரட்டைத் தட்டு ஸ்கூல் பஸ்ஸின் இரைச்சல் சத்தம் கேட்குமுன்னர்., அம்மாவையும் தேங்காய் பாதியையும் எப்படியும் சமாளிக்காலாமென்று....

தேங்காயைப் பாதியை நினைவுக்குள் பதிந்துவிட்டு உயிரியல் பாடத்தின் வீட்டு வேலைக் கொப்பியை மறக்காமலே எடுத்து தோள் பையிற்குள் வைத்தாள். இன்று கண் பற்றி பாடம் நடத்துவதாக சொல்லியிருந்தார். கண்ணுக்குள் நூறு நிலவு எப்படித் தெரியும் என்று சொல்லித் தரப்போகிறாரா என்று எனக்குத் தெரியவில்லை அவளுக்குள் ஓர் சிந்தனைச் சில்லெடுப்பு.

நேற்றடித்த காற்று பின்சில்லில் இறங்காமல் இருக்கிறதா ஒரு தடவை அமுக்கிப் பார்த்தாள். அது நிற்கச் சொன்ன இடத்தில் அப்படியே நின்றது. சயிக்கிள் ஸ்டாண்டைத் தட்டிவிட்டு வீட்டின் முன் கதவைத் திறந்தாள். ரோட்டில் எரிந்துகொண்டிருந்த நூறு வால்ட் மின்குமிழ் நம்பிக்கையோடு எரிய., அவளுக்கு எப்பவுமே குளிருக்கு வரும் தும்மலைத் தூக்கி எறிஞ்சு போட்டு....


                                                                
                                                                           .
தும்பிக்கையானைத் துணைக்கு இழுத்துக் கொண்டு நிமிர்ந்து ரோட்டைப் பார்த்தாள். மதிலுக்கு மேலால ஒரு ஆணின் தலை ஊருவது தெரிந்தது. உற்றுப் பார்த்தாள். அவள் வீட்டு தகரப் படலைக்கு மேலால் அந்தத் தலை தெளிவாகத் தெரிந்தது. அவரே தான். அது வாத்தியார்தான்.

அவருக்கும் அவளுக்கும் வயதளவில் பெரிதாக இடைவெளி இருக்கவில்லை. நாலைந்து வருடங்கள்தான் இடையில் ஓடிக்கொண்டிருந்தது.

வீட்டுக்கு வெளியே வந்தவள்., கெந்திக் கெந்தி ஏறிக் குந்திக் கொண்டாள் அவள் தன்னுடைய சயிக்கிளில். அவரோடு போனால் இருட்டுக்குப் பயமில்லாமல் சேர்ந்தே போயிடலாம். உன்னி மிதித்தாள். சற்றே நிமிடத்தில் அவள் சமாந்தரமாய் பயணிக்கத் தொடங்க திரும்பிப் பார்த்த வாத்தியார். அவர் குரலில் குளிர் ஒட்டிக் கொண்டிருக்க ``குட் மோர்னிங்’’ என்றார். குட் மோர்னிங் சேர்...இன்று ஈவினிங் கிளாஸ் இருக்கிறதா? கணக்குப் பாடத்தில் போன வாரம் விட்டதையெல்லாம் இன்று எட்டிப் பிடித்து விடவேண்டுமென்ற ஓரு துடிப்புடன் அவள் கேட்டாள்.

ஓ....பயணமெல்லாம் எப்பிடிச் போச்சுது எப்ப திரும்பி வந்தனீர்.? கணக்குப் பாடத்தில் வீட்டு வேலை கொஞ்சம் குடுத்தனான். ஆனால் இன்று ஈவினிங் கிளாஸைக் கான்சல் பண்ணிவிட்டேன். அடுத்த வியாழக்கிழமைக்கு இதே நேரம் ஹோம் வேர்க்கெல்லாம் கவர் பண்ணிக்கொண்டு வாருமென்ன.?

ஓம் சேர்... ஒரு வாத்தியாருக்கு கொடுக்கின்ற மரியாதை அவளுக்குள்ளே ஒட்டிக்கொண்டிருந்தது.

மூன்று ரோட்டு சந்திக்க முத்தையா கடையிருக்கும் முச்சந்தி வந்தது. முறையாக வழிவிட்டு முறைப்படி திரும்பினோம். இன்னொரு சைக்கிள் கிரீச்சிட்டு ஒரு பிரேக் போட்டு ஃபிலிம் காட்டி., அவளை முந்திக் கொண்டு, வயதுக்கு வந்து விட்டதாய் வயதுக் கோளாறை அவளிடத்தில் காட்டிவிட்டுப் போனான்., சக வகுப்பு மாணவன் பாரதி.

வாத்தியார் அவளை ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். அவளும் அவரைப் பார்த்து திரும்பவும் ரோட்டைப் பார்த்தாள், பக்கத்தில் வந்துகொண்டிருந்த கிடுகு வண்டிலுக்குள் அவள் சயிக்கிளோடு சுழன்று விளாமல் நிதானித்துக் கொண்டாள்.

வாத்தியாரின் மனதில் என்ன புகைந்ததோ அவளுக்குத் தெரியாது. மாசி மாதம் மூசிப் பெய்த முன்பனியில் மூச்சுக்கு மூச்சு அவர் புகைக்காமலே அவர் வாயால் புகை தள்ளிக்கொண்டிருக்க, அந்த சில நிமிடங்கள் மௌனத்தில் நகர்ந்தன. மின்னிக்கொண்டு போனவன் மின்னாமல் முழங்காமல் டியூட்டரி வாசலில் சிரிப்பை சிதற விட்டு நின்று கொண்டிருந்தான் பாரதி.

அப்படியென்ன அவசரம் முச்சந்தியில் உமக்கு வாத்தியார் அவனிடம் கேட்டார். ஒண்டுமில்லை சேர்....அவன் ஒற்றைக் கண்ணால் அவளை ஓரமாய் பார்த்தான். அவள் நெஞ்சுக்குள் நடுங்கக் கீழே பார்த்தாள்.

உயிரியல் பாடம் உயிரோட்டமாய் நகர்ந்தது. அடுத்த வகுப்பில் தீர்வுகளுடன் சந்திப்போம்.. எல்லோரும் பாடப் புத்தகங்களுடன் எழுந்து நகரத் தொடங்க., ``கஸ்தூரி கொஞ்சம் நில்லும்” வாத்தியாரின் குரல் அவளை நெருங்க அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. வீட்டு வேலை கொஞ்சம் தர வேண்டும். (வாத்தியார் கணக்கைச் சொன்னார்). ஓம் சேர்..கஸ்தூரி கனிவோடு அழைத்தாள். வாத்தியார் அவளிடம் கொப்பியை கொடுத்தபடி கொடுப்புக்குள் சிரித்தார்.

வாத்தியாருக்கு என்ன ஆச்சு.? ஒன்றும் விளங்கவில்லை அவளுக்கு. ``போயிட்டு வாறன் சேர்’’வீட்டில் தேங்காய் பாதி., அவளை வில்லங்கமாய் இழுத்துக் கொண்டுவந்து வீதியில் விட்டது.

வாரமொன்று விரைந்தே பறந்தது. கணக்கு வகுப்புக்கு காலையில் எழுந்து கரெக்டாக நாலரைக்கு தன் வீட்டுத் தகரப் படலையைச் சத்தமின்றித் திறந்தாள். பக்கத்து வீட்டுக்கு நேரே முன்னால்., சில்லென்ற காற்றில் சிணுங்கிக் கொண்டிருந்தது மழை. ஈசல்களுக்கு நடுவில்., மின்னிக்கொண்டிருந்த மின் கம்பத்தின் வெளிச்சத்தில் யாரோ ஒருவன் சயிக்கிளால் இறங்கி நின்று செயினுக்குள் கையை விட்டு சரி பிழை பார்த்துக் கொண்டிருந்தான்.

கஸ்தூரி கெந்திக் கெந்தி ஏறிக் குந்திக்கொண்டாள் சயிக்கிளில். இருட்டில் இன்று தனியான பயணம் பயந்தபடியே கிளம்பினாள். நாலு வீடுகள் தாண்டிப் போகுமுன்னர் இன்னொரு சைக்கிள் அவள் பக்கத்தில் துணையாக வந்தது. அது வேறு யாருமில்லை. அதே வயசுக்கு வந்த அதே வகுப்பு மாணவன் பாரதி.

முத்தைய்யா கடையிருக்கும் முச்சந்தி வர முதலே மூன்றாவது சயிக்கிள் இவர்களை முந்திக் கொண்டு போனது. அட வாத்தியார் இண்டைக்கு பிந்திப் போனாரோ.? இப்படி அவசரமாய்...? இல்லையே இண்டைக்கு எங்களுக்குத்தானே இவர் வகுப்பு எடுக்கிறார்? இப்ப என்ன அவசரம். நாங்கள் ஆறுதலாய் போவம்.
பாரதி சொன்னான். அதைக் கேட்ட கஸ்தூரி அவதானமாய் சயிக்கிளை அதே வேகத்தில் ஓடிக்கொண்டு சென்றாள்.

கார் ஒன்று வந்து கடுகதியாய் நின்றது. தன்னையறியாமல் அவளும் பிரேக்கை பிடித்தாள். பாரதியின் சையிக்கிள் முன்னுக்கு போக அவள் கொஞ்சம் பின்னாடி போய் டியூட்டரியில் சேர்ந்தார்கள்.

கணக்கு வகுப்பு முடிந்தபின் வாத்தியார் உயர்த்திய குரலில் `` ஒரு அறிவித்தல் எல்லோரும் கவனமாய் கேழுங்கோ. பின்னேரம் பௌதீக வகுப்பு இருக்கு. அவசரமாய் பாடத்திட்டம் முடிக்க வேண்டியிருக்கு. எல்லாரும் தவறாமல் வகுப்புக்கு வரவும். வாத்தியாரின் முகத்தில் கொஞ்சம் கடுமை ஒட்டிக் கொண்டிருந்தது. குனிந்த தலை நிமிராமல் கஸ்தூரி வகுப்பை விட்டு வெளியேறினாள். குறுக்கே வந்து தடுத்த வாத்தியார்., கணக்கில் கொஞ்சம் பிழைகளிருக்கு. பின்னேரம் வகுப்பிற்கு கொஞ்சம் முன்னதாக வாரும் டவுட்டை நான் கிளியர் பண்ணுறேன். சரியா...

நான் அப்படியென்ன கணக்கில் பிழை விட்டேனோ..? ஹ்ம்ம். பின்னேரம் நேரத்தோட வந்தால் தெரிஞ்சிடப் போகுது...அதுக்குப்போய் இப்ப எதுக்கு நான் டென்ஷன் ஆக வேண்டும். அவள் அப்படித்தான் எண்ணிக்கொண்டாள்.

ஓம் ..... சேர்.... அவள் மெல்ல நகர்ந்தாள். மேனி லேசாகப் பட படத்தது. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.. பாடலை வாத்தியார் பாடியது போல் உள்ளூர உலுக்கி விட்ட ஒரு பிரமை அவளுக்குள் ஊர்ந்தது. இரட்டை வேகத்தில் இருக்கையைத் தள்ளினாள். கதிரை பின்னோக்கி பிரண்டு விழுந்தது. புத்தகங்களை எடுத்தபடி பின்னோக்கி நடந்த கஸ்தூரி

பின்னேரம் தவறாமல் வகுப்புக்கு வருகிறேன். போயிட்டு வாறேன் சேர்..ர்.

பள்ளிவிட்டு வந்ததும் பரப்பாய் புறப்பட்டாள். எங்க வெளிக்கிடுறாய்.. இவ்வளவு அவசரமாய்? ``இண்டைக்கு எக்ஸ்ரா கிளாஸ் இருக்காமென்று ஏகாம்பரம் மாஸ்டர் காலையில் சொன்னவர்’’. அது தான் போகிறேன்.. அதுக்கு சாப்பிடாமல் போறியா... அம்மா அன்பை அள்ளி கொட்டினாள். கதவை இழுத்து இறுக்கிச் சாத்தியபடி கணக்கில ஏதோ பிழையிருக்காம்.. அதை முதலில திருத்தோணும்..

அரிசிப் புட்டுக்கு நெத்தலி மீன் போட்டு நல்ல சொதி வையம்மா
நான் போட்டு வாறன்’’...புறப்பட்டாள் கஸ்தூரி வேகமாக.

வாத்தியார் அவளுக்காக வாசலிலேயே காத்து நின்றார்.
சயிக்கிளை அப்பிடியே ஓரமாய் சாத்தி வைத்துவிட்டு ஒதுங்கி நின்றாள். உள்ள வாரும். உம்மோட கொஞ்சம் கதைக்கோணும். உதறியது அவளுக்கு. உயிரோட திரும்பிப் போவேனா என்பதுபோல்...விக்கி விக்கி அடித்தது வீக்காய் போன அவளின் இதயம்....

வாரும்..... கஸ்தூரி இப்பிடி இரும். என்ன சேர்..? கணக்கில ஏதோ பிழை இருக்கெண்டு சொன்னீங்கள். என்னுடைய கொப்பி எங்க.? கொப்பியொண்டும் இப்ப தேவை இல்லை. நான் கேக்கிற கேள்விக்கு சுத்தி வளைக்காமல் பதில் சொல்லும். உமக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு..?

அவரின் குரலில் குமுறிக்கொண்டு வந்த வார்த்தை அவளை ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டது. எவனுக்கும்.?...... எனக்கும்..?

என்ன தொடர்போ....சேர்...ர்..ர்..? என்ன சேர் சொல்லுறீங்கள்.?

அவன் தான் சயிக்கிள் செயின்......
சயிக்கிள் செயினோ..? என்ன சேர் சொல்லுறீங்கள். எனக்கொன்றும் விளங்கேல்ல. கொஞ்சம் புரியும்படியாக சொல்லுங்கோவன் சேர்.. அவளின் குரல் தள தளத்தது.

உண்மையைச் சொல்லும். இது எனக்கும் உமக்கும் இடையிலான அவசர மீட்டிங்..

இதில என்ன உண்மை. எது பொய்.. எனக்கு ஒன்றுமே புரியேல்ல... தலை சுற்றுற மாதிரி இருந்தது அவளுக்கு. .

அதென்ன அவருக்கு ஒவ்வொரு நாளும் அதே இடத்தில அதே நேரம் சயிக்கிள் செயின் களருது.? வாத்தியாரின் கண்கள் சிவந்தே இருந்தது. ``எனக்கொன்றும் தெரியாது சேர்.

அன்று ஒரு நாள் காலையில் நான் வீட்டிலிருந்து வெளிக்கிடும்போது... ரோட்டு லைட்டுக்கு கீழே இருந்து யாரோ சயிக்கிள் திருத்தின மாதிரி இருந்தது. . நான் யாரென்று கவனிக்கவே இல்லை. கொஞ்ச நேரத்தால என் சயிக்கிளுக்கு பக்கத்தால ஓவர் டேக் பண்ணாமல் என்னுடன் வந்த போதுதான் நான் அவனைக் கண்டேன். யாருமில்லா அந்த நேரம் ரோட்டெல்லாம் இருட்டாய் வேற இருந்ததனால் நான் சேர்ந்தே வந்தது உண்மைதான்.

இதைத் தவிர வேற எந்த உண்மையும் எனக்கு தெரியாது’’..

அவள் இருந்த மேசையை விட்டு ஒரு வேகத்தோடு எழுந்து அனுமதி கேட்காமலே வெளியே வரவும் பாரதி உள்ளே வரவும் சரியாக இருந்தது.

வாத்தியார் பாரதியைக் கேள்வி கேட்டாரா....இல்லையா..? அது அவளுக்குத் தெரியாது.....ஆத்திரம் தீரும் வரை அவனை அடித்தே துவைத்தார். அடி விழுந்த சத்தத்தில் அவள் விம்மி விம்மி அழுதாள். பலமாய் விழுந்த அடியால் அவனுக்கு பத்துப் போடுமளவுக்கு நொந்திருக்குமே என்றல்ல. இதுவரைக்கும் தூங்கிக் கொண்டிருந்த அவளின் மனம் தூக்கில் தொங்கியதால்......

முக்கோணக் காதல் ஒரு முடிவுக்கு வருவதேயில்லை.....

அருள் நிலா வாசன்.
17.10.2015


No comments:

Post a Comment