தேர் முட்டியில்
தெய்வங்கள்
திசைபார்த்து ஏறும் போதே
உன் கண்களில்
முட்டிய கண்ணீரில்
கவலை
ஒட்டிக் கொண்டிருந்தது
வட்டிக்கெடுத்து
வளையல்
சங்கிலியென்று
வாய் கூசாமல் கேட்ட
அவன்
சீதணப் பட்டியலுக்கு
வஞ்சகமில்லாமல்
நீ போட்ட
அத்தனை பவுணும்
வளைகாப்பு முடிய
அடகு கடை
அலுமாரியில்
அலங்காரப் பொருளாம்...
கேள்விக் குறியாகி
வேள்விக்குக்
கொண்டுபோன
வெள்ளாட்டின்
நிலைபோல
வெறுங்களுத்தோட
அல்லாடும்
அவளுக்கு
விலையென்ன பேசி
விற்றானோ
படு பாவி....
கோட்டுக்குப் போனாலும்
செல்லாது
உன் வழக்கு
கொந்தளிக்கும்
உன் மனசு
கோடி பெறும்
கலங்காதே....
கொட்டிக் கொடுத்து
கட்டி வைச்ச
தாய் மனசை
நோகடிச்சு
பட்டி வளர்க்கத்தான்
போனானோ
வெளி நாடு...?
கொம்பனி சொந்தமென்று
கோடையில
சொன்னவன்
மாரிமழை
பெய்யமுன்
கந்தறுந்து போனானோ..?
கிளிபோல வளர்ந்த பிள்ளை
கண் கலங்காமல்
இருக்குமென்று
நீ கண்ட கனவெல்லாம்
தெளிவின்றிக் கலைந்தாலும்
வாயும் வயிறுமாய்
வீடு தேடி வந்தவளை
இன்னொரு தடவை
வழியனுப்பி வைக்காதே
அவனை நம்பி.....
அருள் நிலா வாசன். .

No comments:
Post a Comment