Monday, 4 January 2016

இன்னும் வீடு திரும்பவில்லை

ஊரறியத் தாலிகட்டி
உருட்டி விட்ட
நாணயமாய்
தன்னருகில்
தலை குனிந்து
தனக்காக
வந்தவளை
ஊரே பார்க்கத்
தலை குனிய
வைத்தவனாய்..


அவள் நித்திரையை
அடகு வைத்து
நித்தமொரு கூலிக்கு
நாள் முழுதும்
அரிசி புடைத்து
பொறுக்கியெடுத்த
சில்லறைக்கு


உச்சி வெய்யில்
மண்டையில
இறங்கி நின்று
சூடடிக்க
கூட வந்த
பசியும் அவள்
வயிற்றைத் தின்று
ஏப்பம் விட


இழுத்து இழுத்து
அரைச்சு வைச்ச
மீன் குழம்பும்
இரால் பொரியும்
ஊரெல்லாம்
மணத்தது...


அவனையே நினைத்து
அவள்
கூட்டி வைத்த
கறியின் ருசி
நேற்றுவரை
காத்திருந்த
அவள்
நீங்காத பசி
நாக்கைச்
சுண்டிச் சுண்டி இழுத்தது....


ஊருக்கு பேரழகன்
ஊரளந்த கால்
வலிக்கு
உருவிவிட
ஒருத்தியென்று
பொருத்தம் பார்த்து
கட்டி வைச்ச
உத்தமியின்
பெற்றோரைக்
குற்றம் சொல்லி
என்ன பலன்....


மன்மத ராசனென்று
ஊரெல்லாம் சிரிக்குதென்று
மனசெல்லாம் அரித்துப்
புண்ணாகி
உள்ளிருந்து அழுபவளின்
உணர்ச்சிகளைக்
கொன்றுவிட்டு....


ராசிபலன் கேட்கவென்று
மறுபடியும்
மந்திரத்தில்
சாத்திரியின் வீடுதேடி
பரிகாரம் பண்ணிவிட்டால்
சந்ததிக்கு விடியுமென்று
சாதகத்தைச் சுருட்டியபடி
சத்தமின்றிப்
போன அம்மா
இன்னும்
வீடு திரும்பவில்லை

அருள் நிலா வாசன்....
04.01.2016                                                       .


No comments:

Post a Comment