Saturday, 22 August 2015

இன்னும் என்ன பார்க்கிறாய்

தூக்கம் கலைந்த
இரவொன்றில்
என்னையே
இரகசியமாய்
பார்த்துக் கொண்டிருந்தது
இருட்டிலிருந்த
சுவர் கடிகாரம்....

ஏதும் வெளிப்படையாக
இல்லாமல்
எதையோ பறிகொடுத்தது
போல
எனக்குள்
உருகிக் கொண்டிருந்தது
எனையே
சிறைபிடித்த
உனதுள்ளம்.....

பாடாய் படுத்தும்
இரவில் பெய்த
சொட்டும் மழையின்
பட்டுத் தூறல்கள்
சொட்டுச் சொட்டாய்
தகரத்தில் விழுந்து

நீ தட்டுவது போல்
மெட்டுப் போட்டு
மெல்லத் திறந்த
கதவு
என்னை மென்று
விழுங்கியது
உன் நினைவின்
கீறல்கள்...

இன்னும் என்ன 
பார்க்கிறாய்
கடி.....காரமே
நான் குடிவந்து
இத்தனை
நாழிக்குப்பின்

முடிந்து போன
கதைக்கு 
முற்று புள்ளிவைக்க
நீ மட்டும் தானே
இப்போதைக்கு
எனக்கு துணை...

சத்தம் போடாதே
நான் கொஞ்சம்
தூங்க வேண்டும்..

இழுத்துப் போர்த்தேன்
இறுகிய மனதை
ஒரு இரவு 
இன்னொரு பகல்
இவ்வுலகத்தையே
மறந்தேன்
இன்னொரு
நாளுக்காய்
பொழுது விடிந்ததே
தெரியாமல்....

அருள் நிலா வாசன்
23.08.2015
                                                       

No comments:

Post a Comment