நீயில்லாத போது
நீட்டி விரித்து
நிமிர்ந்து படுக்க
நிம்மதி
இருக்கவேயில்லை..
மாதமொரு
சேதிவந்து
மறுபடியும்
முடியுதிர
மண்டையில
சூடேறி
உச்சிபிரிக்க
முடியாமல்
இரண்டாகிப் பிரிந்துவிழ....
சொல்லிவைத்த
தேதி மட்டும்
சொடுக்கெடுத்து
மெல்ல மெல்ல
முன்னோக்கி
நகர்ந்துவர...
மரத்தடி அம்மனில்
நான் சாத்தி வைத்த
நம்பிக்கை
நடுவழியில் திரும்பவர.....
குடம் பிரிந்து
குளமாகித்
தாண்டிவந்த
வயல் வெளியில்
தாறுமாறாய்
பெருகிக்கெடுக்க..
உச்சி முதல்
பாதம்வரை
உலகமெல்லாம்
சுற்றிவர...
தலைவாழை
இலைவிரித்துத்
தாவணியில்
திரை மறைத்து
புத்துயிரை
வரவழைத்து
கை நிறையக்
கொடுத்து....
பாரத்தை
இறக்கிவைத்த
பாட்டி
சொன்னதை எல்லாம்......
பக்குவமாய்
எடுத்து
பரிதவித்த
மார்போடு
மறக்காமல்
மறுபடியும்
அணைத்து
மஞ்சள்துணி
போர்த்து வைத்தேன்..
ஏனென்று கேட்கிறியா...?
நீ வரும் போது
பிள்ளைக்கு
பெயர் வைக்கமுன்
உனக்கு
ஒவ்வொன்றாய்
எடுத்துச்சொல்லி
ஒத்திகை பார்க்கத்தான்...
அருள் நிலா வாசன்
05.04.2015

No comments:
Post a Comment